நாகர்கோவில் ஏப் 29
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் “நிமிர்” தீவிர போக்சோ குற்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் தலா மூன்று பெண் காவலர்கள் வீதம் 15 பெண் காவலர்கள் போக்சோ தொடர்பான குற்றங்களையும் அதற்குண்டான தண்டனைகளையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும் ஒரே ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு மார்த்தாண்டம் பகுதியில் விழிப்புணர்வு செய்யும்பொழுது ஒரு தம்பதியினர் தங்களது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததை கண்டறிந்தனர். அத்தம்பதியினரிடம் குழந்தை திருமணத் தடை சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
சிறப்பாக செயல்பட்டு குழந்தை திருமணத்தை தடுத்த “நிமிர்” குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் நிமிர் திட்டத்தை குமரி மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது தனி கவனம் செலுத்தி வரும் எஸ்பி ஸ்டாலினின் முயற்சியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.