ஊட்டி. பிப் 06.
. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக மலை காய்கறிகளில் உருளைக்கிழங்கு, கேரட் , நூல் கோல், பீட்ரூட் ,போன்ற கிழங்கு வகைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் ஊட்டி , குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
கோத்தகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு சுவையும் தரமும் அதிகரித்திருப்பதால் மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகும் ஊட்டி உருளைக்கிழங்கு கடந்த வாரம் வரை விலை வீழ்ச்சியை கண்டது இருப்பினும் மேட்டுப்பாளையம் காய்கறி ஏல மண்டிக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு 8 லோடு, கோலாரிலிருந்து 7, லோடு, இந்தூரில் இருந்து 18 லோடு, குஜராத்தில் இருந்து 4, லோடு என மொத்தம் 37 லோடு உருளைக்கிழங்கு வந்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 1200 முதல் 2200 வரையும் கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 1000 முதல் 1250 வரையும், இந்தூர் உருளைக்கிழங்கு 45 கிலோ 900 முதல் 1000 ரூபாய் வரைக்கும், குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ 750 முதல் 850 வரை விற்பனையானது.
கோத்தகிரி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் ஏல மண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உருளைக்கிழங்கு 45 கிலோ 1000 முதல் 1250 ரூபாய் வரை விற்பனையானது. உருளைக்கிழங்கு திடீரென விலை ஏறியதால் கோத்தகிரி கூக்கல்துறை, மசக்கல், கட்டபெட்டு, தொட்டன்னி, நெடுகுளா, பகுதிகளில் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.