ஊட்டி. ஜன. 18.
வனப்பரப்பு அதிகமாகக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், பணியர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர், தோடர் என்று ஆறு வகை பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
பொங்கல் திருநாள் அன்று காடுகளில் பழங்குடி மக்கள் தங்களது குலதெய்வ வழிபாடுகளை நடத்தி பாரம்பரிய பாடல்கள் பாடி நடனமாடி காணும் பொங்கலாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலை கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளில் கரும்புகள் கட்டி மண் பானைகளில் பொங்கலிட்டு வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதியில் வன தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பழங்குடியின மக்கள் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் கோத்தகிரி பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கின்ற வனப்பகுதியில் பழங்குடியினர் கிராமங்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விழாவாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கோழிக்கரை, மாமரம், சுண்டபட்டி, வாகப்பனை, செம்மனாரை உள்ளிட்ட இருளர் குறும்பர் வாழும் பழங்குடி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செம்மணாரை பகுதியில் தனது குலதெய்வ வழிபாடாக இயற்கை தெய்வங்களுக்கு பொங்கல் இட்டு காணும் பொங்கல் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவரும் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி பலரை கவரும் வகையில் இரவு வரை பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் மரபுபடி நடக்கும் இவர்களின் பண்டிகை விழாவை காண வெளியூர்களில் இருந்தும் பொதுமக்களும், ஊடக துறையினரும், ஆய்வாளர்களும் பழங்குடி மக்களின் பாரம்பரிய திருவிழாவை கண்டு ரசித்து சென்றனர். இவர்களின் திருவிழாவை காணச்சென்ற அனைவருக்கும் இயற்கை தானியங்களை கொண்டு தயாரித்த உணவுகளை வழங்கி உபசரித்தனர்.