திருப்பத்தூர், டிச. 17 –
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி, காணி நிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் கால நடுகல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து முனைவர் க. மோகன் காந்தி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்கு அருகேயுள்ள கல்லாத்தூர் என்ற ஊரில் கள ஆய்வை எங்கள் ஆய்வுக்குழு மேற்கொண்டது. கல்லாத்தூருக்கு அருகேயுள்ள மலைகளும், காடுகளும் சூழ்ந்த இடத்தில் குப்பநத்தம் அணையின் நீர்நிலை அருகே இயற்கை சார்ந்த இடத்தில் ஒரு சிறிய கோயில் ஒன்று இருப்பதாகத் தூய நெஞ்சக் கல்லூரி மாணவி நித்யஸ்ரீ கொடுத்த தகவலின் பேரில் ஆய்வு செய்தோம். அக்கோயிலின் கருவறையில் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் இருப்பதைக் கண்டறிந்தோம். இந்நடுகல் நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்ககாலம் தொட்டே தமிழர் மரபில் நடுகல் வழிபாடு முதன்மையுடையதாக இருந்து வந்துள்ளது. தன் நாட்டையோ, தன் ஊரையோ, தம் செல்வமான மாட்டு மந்தைகளையோ பகைவர்கள் கவர வரும்போது, அத்தகைய பகைவர்களோடு வீரத்தோடுப் போராடி உயிர்விட்ட வீர மறவர்களுக்கு எடுக்கப்படுவது நடுகல்லாகும். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூல் செங்கண்மாவை (செங்கம்) தலைநகரமாகக் கொண்டு ஆட்சிப் புரிந்த நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் ஆட்சிப் புரிந்தான் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளது. நன்னன் அரசாண்ட மலையின் பெயர் நவிரமலை இந்த நவிரமலைத் தற்போது ஜவ்வாது மலை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது. மலைபடுகடாமில் இரண்டு இடங்கள் நடுகல் வழிபாட்டைப் பற்றியும் இரண்டு இடங்கள் நவிர மலை என்பதைப் பற்றியும் இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளது. எங்கள் ஆய்வுக் குழு ஜவ்வாது மலையிலு ள்ள புதூர் நாடு, ப புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடுகளுக்கு உட்பட்ட 12 இடங்களில் நவிர மலை என்ற கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளது.
மலைபடுகடாம் குறிப்பிடும் நவிரமலை மரபை இந்த நடுகல் தாங்கி நிற்கிறது. செங்கம், பரமனந்தல், கல்லாத்தூர், கிளையூர், ஊர்க் கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லவர் காலத்திலேயே பெரும் போர்கள் நடந்ததற்கு அடையாளமாக இந்நடுகல் சான்றாக உள்ளது. இந்நடுகல்லின் சிற்ப வடிவம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கலை நுட்பத்துடன் காட்சித் தருகிறது.
நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் நடுகல் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. போர் மறவனுக்கான ஒல்லியான தேகம், வலதுபக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை, பெரிய துளைகளுடன் கூடிய காதுகள், நேராகப் பார்த்த வண்ணம் வடிவமைக்கப்பட்ட முகம். முகத்தில் பெரிய மீசை, கழுத்தில் ஆபரணம், கைகளில் வீரக் கடகம், கால்களில் வீரக்கழல், இடையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆடை என்ற நுட்பமாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்நடுகல்லின் மிகப்பெரிய சிறப்பு யாதெனில் இடது கையில் பெரிய வில்லைத் தாங்கிக் கொண்டு, வலது கையில் வில்லின் நாணில் அம்பை ஏற்றி பகைவர்கள் மேல் எய்யும் கோலத்தில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. வலது தோள்பட்டையின் பின்புறத்தில் மூன்று அம்புகளைத் தாங்கிய அம்புக்கூடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இந்த வீரனின் தோற்றத்தைப் பார்க்கும் போது இப்பகுதியை ஆட்சி செய்த இனக்குழுத் தலைவன் போலக் காட்சித் தருகிறான்.
வட தமிழகத்தில் இதுபோன்ற நடுகல் சிற்பங்களை மக்கள் வேட்டையப்பன் என்றழைப்பது மரபு. காலப்போக்கில் வேட்டையப்பன் பெயர் மருவி வேடியப்பன் என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் ஏறத்தாழ 1300 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினை இந்நடு கல் வெளிப்படுத்தி நிற்கிறது. இக்கோயிலைச் சுற்றி சில பழங்கற்காலக் கருவிகளும் காணப்படுகின்றன. இவை ஆராய்ச்சிக்குரியன என்று அவர் கூறினார்.



