கன்னியாகுமரி,ஜூன்.10-
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அடுத்த இணையம்புத்தன்துறையில் ரியல் ஸ்குவாட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை கன்னியாகுமரி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
தொழில், விளையாட்டு, கல்வி என எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நாளை ஐபிஎல், கால்பந்து லீக் போன்ற இடங்களில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும். அதுதான் நம் எண்ணமாக இருக்க வேண்டும். பெரிய கனவுகளுடன், ஒழுக்கத்துடன் நமது வாழ்க்கையை கட்டமைத்து கொள்ள வேண்டும் என பேசினார். போட்டி துவக்க நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் ததேயு உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். போட்டியில் மொத்தம் 24 அணிகள் இடம் பெற்றன.இதில், முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.6 ஆயிரம், சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்படுகிறது.