கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தில் வளர்மதி மகேந்திரன் என்பவரது தென்னந்தோப்பில் தென்னை மட்டை உரிப்பதற்காக கல்யாணி (45), ஜெயலட்சுமி (32) மற்றும் சின்னசாமி (45) ஆகிய மூவரும் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென் அங்கு வந்த மலை தேனீக்கள் கூட்டம், மூவரையும் தாக்கியது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்கியதால் நிலை குலைந்து போன மூவரும், தென்னந்தோப்பின் அருகே இருந்த பேருந்து நிழற்குடைக்குள் மறைவிடத்தை நோக்கி ஓடி சென்றுள்ளனர். ஆனால் இவர்களை விடாது துரத்தி கடித்துள்ளது. அப்போது கூலி வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திக்கொண்டிருந்த பெரியசாமி (45) மற்றும் காந்தி (42) ஆகிய இருவரையும் சேர்த்து கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும் தேனிக்களின் கடி தாங்க முடியாமல் கத்தியுள்ளனர். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து படுகாயமடைந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரழந்த பெரியசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



