சென்னை, அக்டோபர் -01,
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை ஏற்பாட்டில் டெக்காத்லான்- ராமி வணிக வளாகத்தில், உலக இதய தினத்தை முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஓவியப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஓவியப் போட்டியில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு வயதினருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரலப ஓவியர் கலைமாமணி டிராஸ்கி மருது பேசுகையில், “காவேரி மருத்துவமனையின் இந்த அற்புதமான முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் போட்டியானது படைப்பாற்றலை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது சமூகத்தில் முக்கியமாக இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கலையின் மூலம், இதய ஆரோக்கியம் பற்றிய முக்கியமான தகவல்களை சமூகத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்றும், இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “சமீப காலமாக உலகளவில் இதய நோய்களின் சுமை அதிகரித்து வருகிறது, மேலும் பல இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். வாழ்க்கை முறையில் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற சில ஆபத்து காரணிகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலக இதய தினத்தில், தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தி, அவர்களின் இதயத்தைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.