நாகர்கோவில் – மார்ச் – 26,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் இயேசு தாசன். இவருடைய மனைவி மணில் (68) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையலுக்கு தேவையான தேங்காய் எடுப்பதற்காக வீட்டின் மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். தேங்காய் குவியலுக்கிடையே கையை விட்டு தேங்காய் எடுத்த போது மணிலின் கையை ஏதோ கடித்ததை உணர்ந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணில் அலறி துடித்துள்ளார். அப்போது அங்கு பார்த்தபோது எலி ஒன்று ஓடியது. எனவே எலி தான் கையை கடித்துவிட்டது என நினைத்த மணில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமையல் வேலையை தொடர்ந்திருக்கிறார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல மணிலுக்கு தலைசுற்றல், குமட்டல் அதிகரித்தது. இதனால் பயந்துபோன மணில் அக்கம்பக்கத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தை சேர்ந்த சிலர் மணிலுடைய வீட்டிற்கு வந்து தேங்காய் குவியலை நகர்த்தினர்.
அப்போது அங்கு எலியும், நல்ல பாம்பு தேங்காய் குவியலுக்கு இடையில் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனால் ஒருவேளை பாம்பு கடித்திருப்பதற்கு வாய்ப்புள்ளது என கருதி உடனே அவரை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த உடனே மணில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு மணிலை பரிசோதித்து பார்க்கையில், அவரை நல்ல பாம்பு தான் கடித்துள்ளதாக டாக்டர் கூறியுள்ளார், மேலும் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்சில் மணிலை ஏற்றிக் கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மணில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி, நாய்க்கடி, பூரான், தேள் கடி, போன்ற விஷங்களுக்கு மருத்துவமனையில் மருந்து இருந்திருந்தால் மூதாட்டியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் பொதுவாக விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் ரப்பர் தொழிலாளிகளும் அதிகம் உள்ள பகுதியான பூதப்பாண்டி கடிகாரங்கோணம் கீரிப்பாறை பகுதிகளில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கண்டிப்பாக பூதப்பாண்டி மருத்துவமனையில் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உயிரை காப்பாற்ற கண்டிப்பாக என் நேரமும் மருந்து இருப்பு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



