ஈரோடு மார்ச் 4
வெளி மாநிலங்களில் இட்லி தயாரிப்பின் போது பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் இட்லி தயாரித்து வழங்கும் இடங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன் அருண்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கருங்கல்பாளையம் பகுதியில் இட்லி தயாரிக்கும் கடைகள் ரோட்டோர ஓட்டல்கள் மற்றும் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அப்போது இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் பல்வேறு கடைகளில் நடந்த ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 6000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து விநியோகம் மற்றும் இருப்பு வைத்தல் தொடர்பாக ரூ 3000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது பற்றி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் கூறும் போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்க ஆவண செய்யப்படும். பொதுமக்கள் உணவு தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.