நாகர்கோவில் நவ 12
வடகிழக்கு பருவமழை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தி தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், குறிப்பாக தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்பக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஏதுவாக அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டிடங்கள் பேன்றவை தங்கும் முகாம்களாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் என தெரியும் பட்சத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள தங்கும் முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வானிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான “தமிழகம் அலர்ட்” (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.