தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கடலூர், தர்மபுரி, தென்காசி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ரூ. 10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள “விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்” உட்கோட்ட அளவில் 9 மையங்கள் மற்றும் வட்டார அளவில் 38 மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது,
தென்காசி மாவட்டத்தில் விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்” தென்காசியில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், மற்றும் சங்கரன்கோவிலில் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு சிகிச்சை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக ஆறு மறுவாழ்வு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென 160 வகையான மறுவாழ்வு உபகரணங்கள் இம்மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுபயிற்சி, இயன்முறைசிகிச்சை, செயல்முறை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற ஆறு சேவைகளை வழங்க வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், சங்கரன்கோவில், சொக்கம்பட்டி, குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய பகுதிகளிலும் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்ற இயன்முறை சிகிச்சை, சிறப்புக்கல்வி மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வட்டார அளவிலான மையங்களிலும் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் 2 சிறப்பு கல்வியாளர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வட்டார அளவிலான சேவை மையங்களிலும் அதே வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கும் சென்று மறுவாழ்வு சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் ஒரு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணித்து அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக்கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அனிட்டா சாந்தி, உதவி செயற் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முகம்மது இப்ராஹிம், உதவி பொறியாளர்கள் சுரேஷ், அஜித், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஆய்க்குடி அமர்சேவா சங்க செயலாளர் சங்கர்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.