மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா வருகிற 12 ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.
கொலு மண்டபத்தில் சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவபெருமானின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கொலு மண்டபத்தில் நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளை தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.
அம்மன் சன்னதி 2ம் பிரகாரத்தில் உள்ள கொழு மண்டபத்தில் நவராத்திரி முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் காட்சி அளித்தார். கைகளில் கரும்பு தாமரை மலர் ஏந்தி காட்சியளித்த மீனாட்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மீனாட்சியம்மனுக்கு முன்பு அலங்கார தொட்டியில் விநாயகர் உருவில்
நீர்க்கோலம் வரையப்பட்டு இருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவையொட்டி 12 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின்
தேங்காய் உடைத்தல் மற்றும்
அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும்
உற்சவ மீனாட்சி அம்மனுக்கு
தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட வில்லை.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஆணையர்/ செயல் அலுவலர் ச.கிருஷ்ணன், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை இந்து சமய அற நிலையத்துறை, உதவிஆணையர் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்,
ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கோவில் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பாத்தியப்பட்ட புட்டுதோப்பு சிவன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன், அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஷ்குமார், அறங்காவலர்கள் மாணிக்கம், அருணாச்சலம் ஏற்பாடு செய்திருந்தனர்.