பரமக்குடி, மே. 3: பரமக்குடி பகுதியில் புதிய மினி பஸ் இயக்குவதற்கான வழித்தடங்களை தேர்வு செய்ததில் விதிமுறைகளை மீறி வழித்தடங்களுக்கு அனுமதி, அனுமதி வழங்கிய வழித்தடங்களை ரத்து செய்து பேருந்து வசதி இல்லாத குக் கிராமங்களுக்கு வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.
தமிழக மினி பஸ் திட்டத்தில், பல திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய மினி பஸ் திட்டம் உருவாக்கப்பட்டு . இதற்கு தமிழக அரசு, கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
தமிழகம் முழுதும், 3,000 வழித்தடங்களில், மினி பஸ்களை இயக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 1,000 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுதும், 91 வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மினி பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களை முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு இறுதி செய்து கொடுத்துள்ளனர். ஆனால், பரமக்குடி வட்டார ஆய்வாளர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்டுள்ள சில வழித்தடங்களில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பரமக்குடி நகர் பகுதியில் இருந்து கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு பேருந்து வசதி இல்லாத குக்கராமங்களை தேர்வு செய்ய வேண்டும், 65 சதவீதம் பேருந்துகள் வசதி இல்லாத பகுதிகளாக தேர்வு செய்ய வேண்டிய வழித்தடங்களை தவிர்த்து விட்டு, ஏற்கனவே பரமக்குடியில் இருந்து விளத்தூர் செல்வதற்காக அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் மீண்டும் அதே வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி புதிய மினி பேருந்துக்கு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காட்டுப்பரமக்குடி முத்தையா கோவிலிலிருந்து விளத்தூர் கிராமத்திற்கு மினி பேருந்து வழித்தடத்தை தேர்வு செய்த போது, சர்வீஸ் சாலை வழியாக ஐடிஐ, பேருந்து நிலையம், சோமநாதபுரம் ஈஸ்டர் நகர் விளத்தூர் என கொடுக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலை வழியாக பேருந்து இயக்கப்படும் பொழுது பரமக்குடி இளையான்குடி வைகை ஆற்றின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதும், ஆற்றில் தண்ணீர் வந்தால் முற்றிலும் சாலை மூங்கும், மேலும், சோமநாதபுரம் உள்ளடக்கத்தில் உள்ள ஈஸ்டர் நகர் பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லாத நிலையில் அங்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. பரமக்குடி சுற்றிலும் அதிகமான குக்கிராமங்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், ஏற்கனவே அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் பொது மக்களுக்கு பயனளிக்காத வகையில், விதிமுறைகளை மீறி புதிய வழித்தடங்களை உருவாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் “
புதிய மினி பேருந்துக இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வழித்தடங்களை இறுதி செய்யக்கூடிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒரு சிலருக்கு ஆதரவாக விதிமுறைகளை மீறி வழித்தடங்களை உருவாக்கி கொடுத்துள்ளனர். பரமக்குடியை சுற்றியுள்ள பல குக்கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் போக்குவரத்து வசதி இயங்கக்கூடிய வழித்தடங்களை மறைத்து புதிய வழித்தடங்களை உருவாக்கி கொடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களை உருவாக்கி மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து மினி பேருந்து சங்க பொறுப்பாளர் கூறுகையில், பரமக்குடி பகுதியில் மினி பேருந்து வழித்தடங்களை விதி மீறல் நடைபெற்றுள்ளது . ஏற்கனவே இயங்கக்கூடிய மினி பேருந்துகளின் நிறுத்தத்தின் பெயரை காட்டாமல்,அருகில் உள்ள இடத்தை காட்டி ஏற்கனவே உள்ள மினி பேருந்து வழித்தடங்களை காட்டியுள்ளனர். பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி தேவை இல்லாத சர்வீஸ் சாலை, ஈஸ்டர் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழித்தடங்களாக காட்டியுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து விளத்தூர் வழித்தடத்தில் 4 அரசு பேருந்துகளும், 5 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாத அதிகாரிகளின் செயல்பாடுகளால் போக்குவரத்து வசதி இல்லாத குக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.
இது குறித்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில் ” முத்தையா கோவில் -விளத்தூர் வழித்தடம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்து கொடுத்துள்ளார்கள். விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை குறித்து மீண்டும் ஆய்வு செய்து. விதிமுறை மீறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்படும் என கூறினார்.