புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடும், கருணையோடும்,கனிவாகவும் அணுகினால் அவர்களுக்கு மன பலத்தை கொடுக்க முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் பேசினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், PINK OCTOBER விழிப்புணர்வு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றியதாவது: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த அன்பர்கள் வாழ்வின் துயரங்களின் உச்சத்தை கடந்து வந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கைப் பயணம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. புற்றுநோய் என்பது ஒருவருக்கு எதனால் வந்தது என்ற கேள்விக்கு விடை மிகவும் கடினம். இதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களான புற்றுநோய் சிறப்பு மருத்துவர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் கதிர் இயக்க மருத்துவர்களின் பணி பாராட்டிற்குரியது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாக மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகளும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். ஆகையால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடும், கருணையோடும்,கனிவுடனும் அணுகினால் நோயாளிகளுக்கு மன பலத்தை கொடுக்க முடியும். பெண்கள் தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு தன்னை பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆகையால் அவர்களுக்கு நோயின் பாதிப்பு அதிகமான உடன் தான் மருத்துவமனை வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் அனைவரும் தனது குடும்பத்தினர்கள் குறிப்பாக குழந்தைகளின் நலன் கருதி தங்களின் உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவர்களுக்கு முறையான சிகிச்சை மூலம் நோயிலிருந்து முழுமையாக குணமடைய வாய்ப்புண்டு.
ஆகையால், ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். கடந்த முறை நான் மருத்துவமனை வந்தபோது என்னை ஒரு பெரியவர் சந்தித்து தனக்கு இங்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக கூறினார். அவ்வாறான மனநிறைவான நோயாளிகளின் கருத்து மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு ஆகும். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ” No one should face breast cancer alone” இதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களுடைய குடும்பம் முக்கியமாக அவரது கணவர், கணவர் வீட்டார் மற்றும் குழந்தைகள் ஆகியோர் உடனிருந்து அவர்களை நன்றான முறையில் கவனித்து, அவர்களை அந்த நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் கு.சிவகுமார், புற்றுநோய் மருந்தியல் துறை இணை பேராசிரியர் காந்திமதி, கலா ராணி, புற்றுநோய் கதிரியக்க துறையின் பேராசிரியர் லலிதா சுப்பிரமணியம், அமுதன், துணை முதல்வர் கலைவாணி, மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, ராஜவேல் முருகன், ராகேஷ் பெர்னான்டோ, மெர்சி, அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி மருத்துவர்கள், பயனாளிகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை செய்து மீண்டவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.