ராமநாதபுரம், ஏப்.5-
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திர கோசமங்கையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களநாத சுவாமி மங்களேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகத்தில் முதல் சிவாலயமாக பெருமை கொண்ட ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்டு சிறப்புடன் பூஜைகள் நடைபெற்று வரும் இத்தலத்தில் பார்வதி தேவிக்கு சிவபெருமான் வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசித்ததால் இவ்வூர் திரு உத்தரகோசமங்கை எனும் திருப்பெயர் பெற்று விளங்கி வருகின்றது. அம்பாளுக்கு சிவபெருமான் திருத்தாண்டவர் காட்சியை இங்கு தான் முதன் முதலில் ரகசியமாக காண்பித்தார். உலகில் எங்கும் இல்லாத வண்ணமாக மரகத நடராஜராக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் திருப்பணிகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா கடந்த ஏப்ரல் 31ம் தேதி ஸ்ரீ மகா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் உடன் துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ மங்கள நாதர் மங்களேஸ்வரி திருக்கோயில் ராஜகோபுரங்கள் விமான கோபுரங்கள் மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை சரியாக பகல் 9.30 மணியளவில் வானத்தில் கருடன் வட்டம் இட சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சேதுபதி மகாராணி ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி மகாராணி பொறியாளர் அபர்ணா நாச்சியார், இந்து அறநிலைத்துறை பொறுப்பாளர் பாண்டியன் தேவஸ்தானம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் முக்கியஸ்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் கலச அபிஷேக புனித நீரை ட்ரோன்கள் மற்றும் பைப்கள் மூலமும் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் ஆராதனைகள் நடத்தப்பட்டது. மரகத நடராஜர் சிலை முன்பு புதியதாக தங்கத்தால் அமைக்கப்பட்ட கொடிமரம் மற்றும் நடராஜர் கருவறை முன்பு முகப்பில் அமைக்கப்பட்ட தங்க கவசம்,நடராஜர் கோபுரத்தின் கூரையில் தங்கத்தால் அமைத்தவற்றை வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 01.04.2025 முதல் 04.04.2025 வரை சந்தன காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை பார்ப்பதற்கு மக்கள் அலை அலையாக நெடுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஸ்ரீ வல்லபை அறக்கட்டளை உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.



