கன்னியாகுமரி, செப்.25
கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், வங்கக்கடல் அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மிகவும் புன்னிய ஸ்தலமாக கருதப்படுகிறது.
இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஏராளமானவர்கள் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதுமட்டுமின்றி இந்த முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுவார்கள். இங்கு உள்ள படித்துறை உடைந்து கடலுக்குள் விழுந்து கிடக்கிறது.இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் கற்களில் அடிபட்டு ரத்த காயங்களுடன் எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் கற்களை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் கன்னியாகுமரியில் சமீபத்தில் ஆய்வு நடத்திய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா முக்கடல் சங்கமம் படித்துறையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்களின் நன்கொடை
மூலம் சீரமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.ராட்சத கிரேன் மூலம் கடலில் இடிந்து விழுந்து மூழ்கி கிடந்த பாறாங்கற்களை தூக்கி அகற்றினார்கள்.
இந்த முக்கடல் சங்கத்தில் உள்ள படித்துறையில் உடைந்து கிடந்த படித்துறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக கட்டும் பணி தொடங்கியது. இந்த பணியை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.