மார்த்தாண்டம், ஜன- 26
மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகன் நவதேவ் (21). இவர் ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் இரவில் தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நவதேவ் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இது குறித்த அவரது தந்தைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அமராவதிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்தது. மகனின் உடலை பார்த்தபோது பின்பக்கத் தலையில் வீக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து இன்று 25ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.