கன்னியாகுமரி, டிச. 4 –
மருந்துவாழ் மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் ‘மகாதீபம்” ஏற்றப்பட்டது.
முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து குடங்களில் பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 61 எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தை முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி, எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மருந்துகள் பாதுகாப்பு இயக்க தலைவர் மருந்துவாழ் மலை அடிகளார் ஜெகன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து எண்ணெய் குடங்கள் மருந்துவாழ் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மலை உச்சி ஆஞ்சநேயர் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபராதனையும் நடந்தது.
இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெந்தது. 3 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள்.



