நாகர்கோவில், டிச. 08 –
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஞானதாசபுரம் ஊரில் இந்து கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 50க்கு மேற்பட்ட ஊர் மக்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஞானதாசபுரம் ஊரில் எந்த மத பேதங்கள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வசித்து வருகிறோம்.
தற்போது இந்த இடத்தில் எந்தவித அரசு அனுமதி பெறாமலும், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஞானதாசபுரம் என்ற ஊரின் பெயரை மாற்றி குபேரபுரி என்று பெயர் மாற்றம் செய்து எங்கள் ஊருக்கும், மக்களுக்கும் சம்மந்தம் இல்லாத இந்து இயக்க தலைவர்களை கூட்டி வந்து கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி ஒரு சிலையை வைத்துள்ளனர்.
இதனால் ஊருக்குள் மக்கள் மத்தியில் சலசலப்பும் அச்சமும் ஏற்பட்டு மத கலவரம் உருவாகுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



