நாகர்கோவில், நவ. 1 –
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா மற்றும் 14வது மணமகள் மன்ற ஆண்டு விழா நாகர்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஆடல், பாடல் நிகழ்ச்சியோடு தொடங்கிய முப்பெரும் விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் வருவாய்த்துறை சங்கத்தினரின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளில் 10, 12 ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை ஆட்சியர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஸ்டாலின் பேசுகையில்: “மாணவர்கள் கல்வி பாடம் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த வரலாறு சார்ந்த புத்தகங்களையும் படித்து தன்னம்பிக்கையும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல நாவல்களை பெற்றோர்கள் படிக்க வேண்டும். அதை பிள்ளைகளுக்கும் கொடுத்து படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளிடம் நீங்கள் டாக்டராக வேண்டும் கலெக்டர் ஆக வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தி படிப்பை திணிக்கக் கூடாது. அவர்கள் எது ஆக வேண்டும் என்று நினைத்துப் படிக்கிறார்களோ அதைப் படிக்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அப்பொழுது பெரிய தலைவர்களாக பெயர் சொல்லும் பிள்ளைகளாக அவர்கள் உருவாகி வருவார்கள். மேலும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் சமூக வலைதளங்கள் மூலம் பயனுள்ளதை தகவல்களை கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்யும்போது பொது அறிவு போன்ற உலக நடைமுறைகளை கற்றுக் கொள்ள முடியும்” என சிறப்புரையாற்றினார்.



