நாகர்கோவில், பிப். 23 –
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடைபெறுகிறது. மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா நடைபெறும் மைதானத்தில் அவசர கால வெளியேற்ற பகுதிகள், பயனாளிகள் வந்து செல்லும் பாதை போன்றவற்றை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் 25-ம் தேதி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமரும் பந்தல் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் எஸ் பி பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் விழா நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மாற்று பாதையில் வாகனங்கள் செல்வது குறித்தும் ஆய்வுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முதலமைச்சர் வருகை முன்னிட்டு மாவட்ட முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தலைமையில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் பங்கேற்கும் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பொன்னப்ப நாடார் சிலை, மணிமண்டபம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அலங்கார வளைவு, புத்தளம் முதல்வர் படைப்பகம் உள்ளிட்ட முதலமைச்சர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



