கன்னியாகுமரி, ஜன. 6 –
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. இன்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியது. இந்நிலையில் திடீரென கடல் நீர் மட்டம் தாழ்வு மற்றும் கடலில் காற்று காரணமாக படகு சேவை 11.30 மணிக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதியம் 3 மணியளவில் கடலில் காற்று மற்றும் நீர் மட்டம் சகஜ நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து, படகு சேவை மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர்.


