ஆரல்வாய்மொழி, ஜன. 16 –
ஆரல்வாய்மொழி வடக்கூர், கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (35) கட்டிடத் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுரேஷ் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தோவாளைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆரல்வாய்மொழிக்கு திரும்பி வரும்போது கணேசபுரம் பகுதியில் வைத்து நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் வேல்முருகன், சுரேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே வேல்முருகன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுரேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதை அடுத்து அரசு பஸ் டிரைவர் செல்வன்ஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான வேல்முருகனுக்கு கோகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.


