இரணியல், பிப்-1
குமரி மாவட்டம் இரணியல் அருகே மாவிளையை சேர்ந்தவர் லெக்ரான் (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது சென்னை ரிசர்வ் வங்கியின் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேக்கு மரங்கள் முறித்து உள்ளதாகவும், மண் கடத்தல் நடப்பதாகவும் சென்னையில் உள்ள லெக்ரானுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து ஊருக்கு வந்து தனது தோட்டத்தில் பார்வையிட்டார்.
பின்னர் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (36) என்பவரிடம் விசாரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விஜயகுமார் அவதூறாக பேசி இரும்பு கம்பியை காட்டி லெக்ரானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து லெக்ரான் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.