ஊட்டி.டிசம். 06.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் குற்றவியல் மற்றும் உரிமை இயல் நீதிமன்றம் கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. கோத்தகிரி பகுதியில் அதிகமான மக்கள் கூடும் இடமான தாசில்தார் அலுவலக வளாகத்தில் இந்த நீதிமன்றம் இயங்கி வந்ததால் தற்போது இட பற்றாக்குறை காரணமாக வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே இட நெருக்கடியான கோத்தகிரி தாசில்தார் அலுவலக பகுதியில் செயல்பட்டு வந்த நீதிமன்ற கட்டிடத்தை பொதுமக்களின் நலன் கருதி வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் புதிய நீதிமன்றம் அமைத்து செயல்பட கோத்தகிரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி சேஷாயி கோத்தகிரியில் புதிய நீதமன்ற கட்டிடம் கட்ட வருவாய் துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள இடத்தை ஆய்வு செய்து விரைவில் அங்கு புதிய கோர்ட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் (நீலகிரி மாவட்ட பொறுப்பு) தலைமையில் ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்பராயன், சதீஷ், சக்திவேல் ஆகியோர் கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சக்திமலை பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி நீதிபதிகள் கூறும்போது கோத்தகிரி சக்திமலை பகுதியில் 4 ஏக்கர் நிலம் புதிய கோர்ட் கட்டுவதற்காக வருவாய் துறை இடம் இருந்து பெறப்பட்டு உள்ளது அங்கு புதிய நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் மற்றும் அலுவலர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள், ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வுக்கு வரும்போது தங்குவதற்கான ஆய்வு மாளிகை கட்டபடும் என தெரிவித்ததோடு இதற்கான கட்டுமான நிதியினை ஒதுக்கப்பட்டு இந்த பணி விரைவாக தொடங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இந்த ஆய்வுப்பணியின்போது நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன், மாவட்ட நீதிபதிகள் லிங்கம், சந்திரசேகர், செந்தில்குமார், கோத்தகிரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, மற்றும் கோத்தகிரி வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


