சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிய சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் இருந்து உடப்பன்குளம் செல்லும் சாலையை போக்குவரத்து நெருக்கடி மற்றும் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த சாலைகளை அகல படுத்த வேண்டும் என பொதுமக்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசி அமைச்சரின் ஒப்புதல் பெற்று தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை அகலப்படுத்தும் பணியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது சாலையின் அகலம் மற்றும் நீளம் ஆகியன குறித்து அளவீடு செய்தும், சாலை அமைக்கப்படும் தரம் குறித்தும் ஆய்வு செய்து தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சிறந்த முறையில் சாலை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்ட ராஜா எம்எல்ஏவுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த ஆய்வின் போது சங்கரன் கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர் முத்துமணி, அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர். திமுக ஆட்சி அமைந்தது முதல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சங்கரன்கோவில் பகுதியில் ராஜபாளையம் சாலை மற்றும் கழுகுமலை சாலை ஆகிய சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



