ஈரோடு ஏப் 22
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்கள் தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானிங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளார் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் தொழில் முறை டாக்சி வாங்குவதற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளரின் குழந்தைகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றதற்கான ஊக்கத் தொகை என 4 பயனாளிகளுக்கு ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், உதவி இயக்குநர் (தொழிலாளர் துறை) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.