திருப்பூர்மே:30
ரயில் நிலையம், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், திருப்பூர் வடக்கு மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் வித்தியாசமான முறையில் பிளாஸ்டிக் இல்லா இரயில் நிலையமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் ரயில்வே மேலாளர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கும், நமது சுற்றுசூழலுக்கும் கேட்டினை விளைவிக்கின்றன. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பாட்டில்களை முறையாக அப்புறப்படுத்தி அவற்றை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.
பின்னர் மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், திவாகர் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகளை கலைநிகழ்ச்சி மற்றும் பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பிறகு பயணிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்தும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ரயில்நிலைய துணை மேலாளர் பண்டிட், சுகாதார அலுவலர் சூரியபிரகாஷ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.