தேனி பிப்.4-
மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமி தரிசனம் செய்து திருவிழாவிற்கு விரதம் ஏற்க காப்புகட்டி சென்ற பக்தர்கள் .
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று அடைத்த கதவுக்கே இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றது என்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம்.
இந்நிலையில் இந்த வருடம் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக பரம்பரை காவல்காரர்களால் வெட்டி கொண்டு வரப்பட்ட 80 அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டு,சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு மூங்கில் கொடிமரம் ஊன்றப்பட்டு கொடியேற்றும் வைபவம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன்,தங்களின் நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்காக அனைவரும் காப்பு கட்டி கொண்டனர்.