கன்னியாகுமரியில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் வாரம் ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு வழங்கப் படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு வழங்கியுள்ளார்.அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.V.செந்தில்குமார் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் இணைந்து நேற்று கன்னியாகுமரியில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட 35 கடைகளை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, உணவு தொழில் சார்ந்த கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய 12.500 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்திய 5 உணவகங்களுக்கு தலா 2000 வீதம் மொத்தம் 10000 மற்றும் இரண்டாம் முறை பாலித்தீன் பைகள் பயன்படுத்திய ஒரு உணவகத்திற்கு ரூ5000 அபராதம் விதிக்கப்பட்டது.முந்தையநாள் தயாரித்து விற்பனை செய்த பிறகு மீதமுள்ள இறைச்சி, நூடுல்ஸ் போன்ற 8 கிலோ எடையுள்ள பழைய உணவு பொருட்கள் மறுநாள் விற்பனைக்காக குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் இது போன்ற சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு தலா ரூ 1000 வீதம் மொத்தம் 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும் இரண்டு கடைகளில் இருந்து தமிழ்நாடு அரசின் மூலம் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு அந்த இரு கடைகளுக்கும் தலா ரூ 25000 வீதம் மொத்தம் ரூ 50,000 அபராதமும் விதித்து இரண்டு கடைகளும் இரண்டு வார காலத்திற்கு மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



