அரியலூர், ஆக:04
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்; பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் போக்குவரத்துறை அமைச்சர் பேசியதாவது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவாதிரை விழா தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்புதான் இந்த விழா. நம்முடைய மண்ணிற்கு பெருமை சேர்த்த மகத்தான மாமன்னன் இராஜேந்திர சோழனை கொண்டாட வேண்டியது நமது கடமை. இராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கு சான்றாக அவர் கட்டிய கோவில்கள், செப்பேடுகள், சிற்பங்கள் இருக்கிறது. நாம் அதை வைத்து ஆதாரபூர்வமாக கொண்டாடுகிறோம். நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து, வேறொரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காக செய்கிறார்கள். இதனை முத்தமிழறிஞர் கலைஞர் உணர்ந்ததன் காரணமாகத்தான் நமக்கான அடையாளம் எது? நமக்கான பண்பாடு எது? என்பதனை அறிவதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்கள்.
நமக்கு வழிகாட்டுவது நமது மொழியில் வந்த திருக்குறள்தான். எனவே திருக்குறளை நாம் கற்க வேண்டும். உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றுதான் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைத்தார். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். அதேபோல தமிழ்நாட்டு வாழ்வியலை எடுத்துக்காட்டும் சிலப்பதிகாரத்தை தூக்கி பிடிப்பதற்குதான் பூம்புகாரிலே கோட்டம் அமைத்தார். இப்படி நம் மண்ணோடு நமக்கு சொந்தமானவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் இராஜேந்திரசோழன் வரலாற்றை நாம் நினைவு கூறவேண்டும், அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் அரசு விழாவாக கொண்டாடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பிரதேசத்தில் இப்படி ஒரு கோயிலை நிறுவ வேண்டும், களம் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் என்றால், எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் எவ்வளவு நுணுக்கமாக, சிந்தனையோடு அவர் செயல்பட்டு இருந்தால் இவ்வாறு அமைத்திருக்கும் என்று நாம் உணர வேண்டும்.
இங்கு இருக்கிற சோழகங்கம், பொன்னேரி மட்டுமல்ல இந்த மாவட்டத்தில் எந்த கிராமத்திற்கு சென்றாலும் அங்கு ஒரு ஏரி இருக்கும், ஒரு குளம் இருக்கும். அவை அனைத்தும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோவில்கள் அனைத்தும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான். அந்த கோவில்கள் ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிப்பதற்கு, இன்றைக்கு உள்ளாட்சி மன்றத்திற்கு எப்படி அலுவலகங்கள் இருக்கிறதோ அதே போன்று அலுவலகமோ, மக்கள் கூடுகின்ற பெரிய தளமாகவும், அவர்கள் வழிபாடுவதற்கு கோயிலாகத்தான் ஒவ்வொரு கோயில்களும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் நீர் மேலாண்மைத் துறையாக இருந்தாலும், படை நடத்தி செல்வதாக இருந்தாலும், கட்டிட கலையாக இருந்தாலும் அது இராஜேந்திரசோழன் காலத்தில் அது மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்ந்து நின்றது. அதனால்தான் அந்த சோழனின் வரலாற்றை நாம் கொண்டாட வேண்டும். இந்தியாவில் வாழ்ந்த மன்னர்களில் யார் அதிக பரப்பளவை கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளார்கள் என்றால் அது இராஜேந்திரசோழன்தான். இந்தியாவிலேயே அதிக நிலபரப்பை ஆண்ட மன்னன்தான் இராஜேந்திரசோழன்;. இலங்கை, மலேசியா நாடுகளின் பகுதிகளை தம்முடைய கப்பல் படைகளை கொண்டு அவற்றை கைப்பற்றி தன்னுடைய ஆட்சியை நிறுவியவர் இராஜேந்திரசோழன் ஆவார்.
இராஜேந்திரசோழன் இப்பகுதியை பண்படுத்தி, மக்கள் வாழுகின்ற பகுதியாக கொண்டுவந்த காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இப்பகுதியில் வாழும் மக்கள் மூதாதையர்களை கொண்டாட வேண்டும் என்றால் முதலில் இராஜேந்திரசோழனைதான் கொண்டாட வேண்டும். அப்படிபட்ட இராஜேந்திரசோழனை கொண்டாடுவதற்குதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தொடர்ந்து இப்பகுதி முன்னேறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். ஆன்மீக தளமாக இருந்ததை, வரலாற்று தளமாக முதலமைச்சர் மாற்றியமைத்திருக்கிறார். எதிர்காலத்தில் முக்கிய சுற்றுலா தளமாக இதன் மூலம் இந்த பகுதி முன்னேறுவதற்கு வாய்ப்பையும் தொடர்ந்து முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார்கள். இப்பகுதி வளர்வதற்கு இந்த விழா மூலம் உறுதுணையாக இருப்போம். இந்த விழாவினை நடத்தும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசினார்.
மேலும், ஆடித் திருவாதிரை விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ, மாணவியர் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் தஞ்சாவூர் / அரியலூர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், இந்து சமய அறநிலையத் துறைய உதவி ஆணையர் நாகராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், வட்டாட்சியர் ஜெயங்கொண்டம் சம்பத்குமார், கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்