கன்னியாகுமரி ஆக 8
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஒரு சிலருக்கு ஆடு, மாடுகளை வளர்ப்பதிலும், சிலருக்கு பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும், இன்னும் சிலருக்கு புறா, கிளி, மைனா உள்ளிட்ட பறவைகளை வளர்ப்பதிலும் ஆசை இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு.
கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயியான பாலசேகரன் 75. இவரது மனைவி சரஸ்வதி 70. வீட்டில் தனியாக வசித்து வரும் இந்த வயதான தம்பதிகளுக்கு கோழிகளை வளர்ப்பதில் அலாதி பிரியம். எனவே இவர்கள் சுமார் 10 க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார்கள்.
இவர்கள் அந்த கோழிகளை தங்கள் சொந்த பிள்ளைகளைப் போல் மிகவும் பிரியமாக பராமரித்து வளத்து வருகிறார்கள். மேலும் இந்த தம்பதியினர் தினமும் தங்களின் செல்ல பறவைகளான இந்த கோழிகளுக்கு தேவையான தண்ணீர், அரிசி, தவிடு உள்ளிட்ட உணவுகளை வழங்குவதும், அவைகளுடன் மிகவும் நேசத்துடன் கொஞ்சி மகிழ்வதும் இவர்களுக்கு வழக்கமான அன்றாட நிகழ்வுகளாகும்.
இந்நிலையில் இந்த தம்பதியினரின் வீட்டிலுள்ள மூன்று கோழிகள் மிகவும் வித்தியாசமாக பெரியது, சிறியது மற்றும் மிகமிகச் சிறியது என மூன்று விதமான அதிசய முட்டைகள் போட்டுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்த்து செல்கின்றனர்.