நாகர்கோவில் நவ 6
கன்னியாகுமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகம் நாகர்கோவில் அருகே வடசேரியில் உள்ளது. இங்கு வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த மகாராஜா பிள்ளை என்பவர் தனக்கு சொந்தமான சொத்தில் பணிகள் செய்ய என்ஓசி கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.விண்ணப்பத்தின் படி என்ஓசி அளிக்க மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரை அணுகியபோது ரூபாய் 10,000 தந்தால் உடனடியாக என்ஓசி பெற்று தருவதாக பால்ராஜ் கூறி உள்ளார். இல்லையென்றால் சான்று கிடைக்காது என்று கூறியுள்ளார். அதனால் வேறு வழியின்றி அவரிடம் பேரம் பேசியும் ஒப்புக் கொள்ளாமல் 10,000 ரூபாய் தந்தால் மட்டுமே என் ஒ சி கிடைக்கும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் மகாராஜா பிள்ளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் இடம் புகார் அளித்துள்ளார். அவருடைய ஆலோசனையின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் பத்தாயிரம் பணத்துடன் மகாராஜா பிள்ளை மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு சென்று பால்ராஜிடம் அவர் கேட்டபடி லஞ்சபணம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பால்ராஜை பிடித்து கைது செய்து உள்ளனர். இவர் மூலம் தான் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் இந்த லஞ்சப்பணம் தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கூடுதல் விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.