தருமபுரி புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்திற்கு வரும் பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும், அவர் கேட்டறிந்தார். பேருந்து நிலையங்களில் தேவையான மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? பேருந்து நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். பேருந்து நிலையங்களுக்கு வரும் பேருந்துகளின் விவரம் கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை ஆய்வு செய்த ஆட்சியர் இதனை முறையாக பராமரிக்க வேண்டும். கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருப்பதை உடனே அகற்ற வேண்டும். நடைமேடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் வைக்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களை பேருந்து நிலையங்களுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் நகராட்சி கட்டண கழிப்பறைகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளார். அப்போது கட்டண கழிப்பறையை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ
5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆவியின் போது நகராட்சி அதிகாரிகள், போலீஸ் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



