தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலத்தூர் கிராமத்தில் மே1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இலத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக மரங்களை நட்டு வைத்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் வைக்கப்பட்டுள்ள சாதனை விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
இக்கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், மாவட்ட ஊராட்சி செயலாளர் சுமதி, செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



