ஆரல்வாய்மொழி பிப் 6
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
செண்பகராமன்புதுார் காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு, இம்மாதத்தில் எவ்வளவு காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள?. முந்தைய மாதத்தில் எவ்வளவு காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள? மற்றும் காசநோயாளிகளின் நிலைப்பாடு குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
நமது மாவட்டம் முழுவதும் 100 நாட்கள் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் எவ்வாறு நடைபெற்று வருகிறது? முகாமில் எத்தனை காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மாவட்டத்தில் காசநோயாளிகளுக்கு முறையாக ஊட்டச்சத்து பெட்டகம் பெற்றுள்ளார்களா? இந்த ஊட்டச்சத்துக்கென்று மாதந்தோறும் அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை முறையாக செலுத்தப்பட்டுவருகின்றதா? காசநோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
காசநோய் நோயாளிகளிடம் அவர்களுக்கு சிகிச்சை காலங்களில் மாதந்தோறும் 1000 கிடைக்கிறதா என கேட்டறியப்பட்டது. நமது மாவட்டத்திற்காக கொடுக்கப்பட்ட இலக்கினை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட சுகாதார அலுவலர், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.