நாகர்கோவில் மார்ச் 06
கன்னியாகுமரி மாவட்ட நீர்வள ஆதாராத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் மூலம் தண்ணீர் வசதி பெறும் பாண்டியன் கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மொத்தமுள்ள 1100 மீட்டரில் 38 மீட்டர் உடைப்பு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் சென்று கொண்டிருந்தது. மேற்படி தளத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.20 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு. பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தோவாளை வட்டத்திற்குட்பட்ட இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள விஷ்ணுபுரம் குளத்தில் 16.50 மீட்டர் நீளத்தில் ரூ.15 இலட்சத்தில் நிரந்தர வெள்ள சேத தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், நாவல்காடு கிராமத்தில் பூக்குழி குளத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.64 கோடி மதிப்பில் பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலைய வணிக வளாகத்தினை நவீனமயமாக்கும் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, பணிகளை தரமானதாகவும், உறுதிதன்மையுடன் கட்டப்பட்டு வருவதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதிப்படுத்துவதோடு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற ஆய்வில் கோதையாறு வடிநிலக்கோட்டம் உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் அஜீஸ், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன். துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.