நாகர்கோவில் ஜூலை 26
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தை வியாபாரிகளை அப்புறப்படுத்தி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சிக்கு விசிக மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தையில் 240 க்கும் அதிகமான சிறு,குறு வியாபாரிகள் மீன், காய்கறி, கிழங்கு, பழம் என பலவகை அத்தியாவசியப் பொருட்களையும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ் சாலைத்துறை ஏதோ உத்தரவு பெற்றிருப்பதாகச் சொல்லி, மாநகராட்சி அதிகாரிகளுடன் கைகோர்த்து சந்தையில் இருக்கும் சிறு,குறு வியாபாரிகளை அப்புறப் படுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வியாபார இடங்களை ஜே.சி.பி மூலம் சேதப்படுத்தவும் செய்துள்ளனர்.
இருளப்பபுரம் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் கடந்த 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகின்றனர். இவர்களை திடீரென அப்புறப்படுத்துவது அவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து விடும்.
இந்த மீன் சந்தையால் சுகாதாரக் கேடு அல்லது போக்குவரத்து நெருக்கடி நிலவுவதாக நினைத்தால் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள சரலூர் மீன் சந்தையில் இவர்களுக்கு ஷெட் அமைத்து இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் வரை இருளப்பபுரம் சந்தையிலேயே இவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இருளப்பபுரம் சந்தை சிறு, குறு வியாபாரிகளை திரட்டிக கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.