நாகர்கோவில் ஜன 26 ,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து 20 இருசக்கர ரோந்து வாகனம், 23 பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு வாகனம், 8 குற்றத் தடுப்பு நான்கு சக்கர வாகனங்கள், GPS பொருத்தப்பட்ட 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஆகியவற்றை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குற்றத் தடுப்பு வாகனங்கள், ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் போலீசார் 24*7 மணி நேரமும் ரோந்து பணியில் இருப்பார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு வாகனங்களில் பெண் போலீசார் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்கும் ரோந்து பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் IPS, கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.