குலசேகரம், டிச- 1
திருவட்டார் அருகே குட்டைக்கோடு பகுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நிர்வாகிகளுக்கு இடையே இரு பிரிவாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கு ஆதரவாக 100 – க்கும் மேற்பட்ட வாலிபர்கள் டவுசர் சட்டையுடன் போதையில் ஆயுதத்துடன் அப்பகுதி பொதுமக்களை பயப்படுத்தும் வகையில் சுற்றி திரிந்துள்ளனர்.
இது பற்றி பொதுமக்கள் திருவட்டாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து செறுகோல் பஞ்சாயத்து தலைவர் அனுசன் ஐயப்பனுக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் உட்பட கவுன்சிலர்கள் இணைந்து திருவட்டார் போலீஸ் நிலையத்தை இன்று (30-ம் தேதி) காலை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.