ஊட்டி. பிப். 23.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா ஆதிவாசிகள் வசிக்கும் கிராமத்தில் அரசு பள்ளியில் இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கிராமத்திற்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாகத்தான் சென்றுவர வேண்டும் பழங்குடி மக்கள் அதிகமாக அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி பாடத்தை தவிர மாணவர்கள் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈர நிலம், ஆதி நிலம் அமைப்புகள் சார்பாக இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் என்ற தலைப்பில் ஓவிய ஆசிரியர் தமிழரசன் படைப்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய கண்காட்சியை நடத்தினர். இதில் அரிய வகை பறவைகள், விலங்குகள், பூச்சி இனங்கள் உட்பட சூழல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியை ஈரநிலம், ஆதி நிலம் அமைப்பின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கண்டுகளித்தனர். உலக அளவில் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனை, இயற்கையை காப்பதின் அவசியம், சூழலியலுக்கு ஏற்ற பல்லுயிர்களின் பணிகள், மனிதர்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் உயிரினங்கள், காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள், ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் இந்த ஓவியங்கள் மூலம் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து உயிர் சூழலில் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆசிரியை சீதா மயிலா வரவேற்றார். ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார். பள்ளி தலைமை ஆசிரியை வினோதினி வழிகாட்டுதல் படி ஆதி நிலம் அறக்கட்டளையை சேர்ந்த வீரப்பன் இந்த ஏற்பாடுகளை செய்து இருந்தார்.