நாகர்கோவில் ஜூன் 23
தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜீன் 24ம் தேதி திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில் தற்போது போதைப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதோடு, போதை பழக்கத்திற்கு ஆளாகி இளைய தலைமுறையினர் முதல் அன்றாடம் வேலை செய்கின்ற மக்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் பலியான துயர சம்பவம் தமிழ் நாட்டில் அரங்கேறி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிர் இழந்தனர். இதனால் கள்ளச்சாரயத்திற்கு பலியான குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்கால வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த துயர நிலை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொள்ளுமா? எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், குமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று தி.மு.க அரசை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.