அரியலூர், நவ;06
அரியலூர் மாவட்டத்தில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,21,30,000 மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம், மாதபுரம், காட்டாத்தூர், பெரியாக்குறிச்சி, நின்னியூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கட்டடங்களையும், செந்துறை மாதிரி உயர்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் நல்லநாயகபுரம் கிராமத்தில் சமுதாய கூடம் கட்டடத்தினையும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் திறந்து வைத்தார்;.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம் கிழக்கு தெருவில் கட்டப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் (முழுநேரம்) நியாய விலைக்கடையினையும், தொடர்ந்து எறவாங்குடி ஊராட்சியில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் (பகுதிநேரம்) நியாய விலைக்கடையினையும், பின்னர் காட்டாத்தூர் ஊராட்சியில் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூவத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் (முழுநேரம்) நியாய விலைக்கடையினையும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.
பின்னர், செந்துறை ஊராட்சி, செந்துறை மாதிரி உயர்நிலைப்பள்ளியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, வஞ்சினபுரம் ஊராட்சி, நல்லநாயகபுரம் கிராமத்தில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன் பின்னர் பெரியாக்குறிச்சி ஊராட்சி, நல்லாதெருவில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினையும், தொடர்ந்து நக்கம்பாடி ஊராட்சி, நின்னியூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினையும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி, விற்பனையினையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஜெயங்கொண்டம் வருவாய் கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஷீஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிவானந்தம், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) இளஞ்செல்வி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்