நாகர்கோவில் டிச 10
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினார்.அதில் ,கன்னியாகுமரி வில்லேஜ்குட்பட்ட நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சர்வே எண் 600/1, மற்றும் 601 ஆகிய இரு சர்வே எண்ணுக்குட்பட்ட பகுதியில் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலை நிறுவுவதற்காக கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தீர்மானத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறைக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அமைப்பிற்கும் மேற்படி சர்வே எண்களில் கலைஞர் கருணாநிதி திருஉருவச் சிலையை நிறுவுவதற்கு அரசு நிர்வாகங்களின் துறை சார்ந்து அனுமதி வேண்டி கன்னியாகுமரி பஞ்சாயத்து நிர்வாகம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளது.
மேற்படி சர்வே எண்ணிற்கு உட்பட்ட இடத்தில் கலைஞர் கருணாநிதி திருஉருவச் சிலையை நிறுவுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை .தாங்கள் கலைஞர் கருணாநிதி திருஉருவச் சிலைக்கு அனுமதி கொடுத்தால் திமுக என்ற அரசியல் கட்சி அவ்விடத்தை ஆக்கிரமிக்க நேரிடும்.
அதனால் பொது மக்களுக்கும், மற்ற மாற்று கட்சியினருக்கும் இடையே பிரச்சனைகள் வரக்கூடும் .கலைஞர் கருணாநிதி சிலையை நிறுவுவதற்கு மேற்குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் அனுமதி வழங்கினால் அதன் பின்பு அவ்விடத்தில் மாற்றுக் கட்சியினரும் அவர்கள் கட்சித் தலைவரின் திருஉருவச் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கேட்க நேரிடும்.
அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் தங்கள் தலைவர்களின் திருஉருவச் சிலையை அவ்விடத்தில் நிறுவ நினைத்தால் பொதுமக்கள் அவ்விடத்தை சரியான பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது.
மேலும் அவ்விடம் ஆனது தற்போது பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறுவதற்கும் சிறந்த இடமாக உள்ளது .தாங்கள் சிலையை நிருவ அனுமதித்தால் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படக்கூடும் என்பது உறுதி.
இது சம்பந்தமாக உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், அவர்களுக்கு நேரிலும் பதிவு தபாலிலும் புகார் மனுவை சமர்ப்பித்து உள்ளேன்.
ஆதலால் கருணாநிதி திருஉருவச் சிலையை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சர்வே எண் 600/1, மற்றும் 601 லிலும் மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி வில்லேஜ்குட்பட்ட எந்தப் பகுதியிலும், மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களான அரசு துறைக்கு சொந்தமான எந்த இடத்திலும் சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு வழங்கும் போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் சாலோமன் தீபக் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.