நாகர்கோவில், ஜூன் 2:
நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (3 ம் தேதி) காலை 9 மணிக்கு எனது தலைமையில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
மேலும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பகுதி, பேரூர் அனைத்து கிளை கழகங்களிலும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் வட்ட கழகங்கள், ஊராட்சி கிளை கழகங்கள், சார்பு அணிகளின் சார்பாகவும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி தங்கும் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்குதல், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கிட வேண்டும்.
கலைஞரின் சிறப்புகளை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டம், பொது கூட்டம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, இளைஞரணி சார்பாக தெருமுனை கூட்டங்களையும் எழுச்சியோடும் நடத்தி கலைஞரின் நினைவை கூறும் வகையில் கொண்டாட வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் வட்ட கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.