அரியலூர்,மே:31
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக மாவட்டத் துணை அமைப்பாளர் மகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நரசிங்கபாளையம் கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அருமைராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார்(21). இவர், டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டதால், அந்த பெண் பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக அந்தப் பெண் பேருந்து நிலையத்தில் நேற்று காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார், அவ்வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு நகர பேருந்து, நரசிங்கபாளையம் காலனி பேருந்து நிறுத்தத்துக்கு அருகே வருவதற்கு முன், பேருந்தை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை (பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்) வீசியுள்ளார். இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனால், அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து நொறுங்கி எரிந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி ஓடினர்.
இதனிடையே, பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸார், பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.