நாகர்கோவில் அக் 02,
பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம்
அறிவியல் ஆர்வத்தையும் கணித அறிவையும் மேம்படுத்திட வானவில் மன்றம் என்ற மன்றத்தினை ‘எங்கும் அறிவியல்யாவும் கணிதம்’
என்ற அடிப்படை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 710 கருத்தாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எய்டு இந்தியா, சுடர், பாரிக்சன் போன்ற அமைப்பு மூலம் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் 11 நபர்கள் கருத்தாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் கவுரவத் தலைவர் ஷெலின் மேரி தலைமை தாங்கி அனைத்து குழந்தைகளிடமும் அறிவியல் மனப்பான்மை வளர்த்திட ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை எழுப்ப வைக்க வேண்டும். காரண காரியங்களை பரிசோதித்து அவற்றிற்கான தீர்வை அவர்கள் கண்டறிய உதவி செய்ய வேண்டும். விஞ்ஞானிகளுடைய வரலாற்றை அவர்கள் அறிந்து கொள்ள உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அறிவியல இயக்கத்தின் மாநில செயலாளர் ஜெனிதா அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக்ராஜ் வானவில் மன்ற கருத்தாளர்கள் செய்யும் மகத்தான பணிக்கு வாழ்த்துக் கூறினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜன் கலந்துகொண்டு
வானவில் வந்த நிகழ்வுகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு மாவட்ட மாநில போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும்.
அரசு மாணவர்களுக்கு
பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதில் வானவில் மன்றமும் ஒரு சிறந்த உதாரணம். இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக
உருவாகி நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக விளங்குவர்.
இவர்களிடம் தேசிய வருவாய் திறனறி தேர்வு,கலைப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
என்று கேட்டுக்கொண்டார். வானவில் மன்ற கருத்தாளர்கள் சோனியா பிரதிக்சா,கலை, ஆகியோர்
அறிவியல் பரிசோதனைகள் குறித்து பயிற்சி அளித்தனர். இம்மன்றம் மூலம் சிறப்பாக பங்கேற்று புதியன படைக்கும் மாணவர்கள் 25 பேர்
அரசு சார்பில் கல்வி சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தொடர்ந்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கல்வி அலுவலகத்தில் வைத்து கருத்தாளர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவரும் வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சசிகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தனலதா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.