இரணியல், ஆக. 30 –
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று இரவு கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தக்கலை தாண்டி வில்லுக்குறி எஸ்பிஐ வங்கி அருகில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நடந்து சென்ற வில்லுக்குறி சரல்விளை கணேசன் (65) என்பவரை இடித்து தள்ளி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. படுகாயம் அடைந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்து ஒழுங்கு படுத்தினர். விபத்தில் பலியான கணேசனுக்கு பாலம்மாள் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சம்பவம் குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



