சென்னை, ஆக. 30 –
தமிழக அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தனது முதற்கட்ட மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அலுவலகத்தில் கட்சியின் பொது செயலாளர் N. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனையில், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 10 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட பயணம் இந்த மாவட்டங்களிலிருந்தே துவங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்பயணத்திற்கான காவல்துறை அனுமதி பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகள், தொழில் சார்ந்த சவால்கள், மேலும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து தொகுத்து தலைவரிடம் விளக்கப்பட்டது. விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தின் போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரச்சனைகளை நேரடியாக மக்கள் முன்னிலையில் எடுத்துரைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்கள் பகிரப்பட்டன.
தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிக்கோளாக வைத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மாநில மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஏற்கனவே ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது மாநில மாநாடு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்திலேயே விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முதற்கட்ட சுற்றுப்பயணத்திற்கான திட்டமிடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விஜய் தனது பயணத்தின் மூலம் மாவட்ட மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வுகளை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



