நிலக்கோட்டை, ஆக. 29 –
தமிழகத்தில் உள்ள பல்வேறு மலர் சந்தைகளில் நிலக்கோட்டை பூ மார்க்கெட் என்பது உலக அளவில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் ஆகும். இங்கு வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரசித்த பெற்ற நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து உலர் பழங்கள், ஏலக்காய்கள் மூலமாக சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் மாலை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக தயார் செய்து மாலைகளை அனுப்பியதை இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பார்த்து வியப்படைந்தனர்.
தமிழகத்தினுடைய நாகர்கோவில் பகுதியில் உள்ள கீழவண்ணான் வினை என்ற கிராமத்தில் உள்ள சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலை மாட சாமியும் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மறச்சாமி கோயிலுக்கு ஆவணி மாத கொடை விழாவிற்கு நிலக்கோட்டையில் இருந்து ஏலக்காய், கருப்பு திராட்சை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகிய உலர் பொருட்களைக் கொண்டு சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் 8 அடி உயரத்தில் 2 மாலைகளும், 4 அடி உயரத்தில் மாலை ஒன்றும் என தயார் செய்து வருகிற 30ம் தேதி தொடங்கும் திருவிழாவிற்காக பிரம்மாண்ட மாலைகளை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ மாலை கட்டும் தொழில் செய்து வரும் முருகன் என்பவர் தயார் செய்து அனுப்பி வைத்தார்.
இது குறித்து முருகன் கூறும் போது நாகர்கோவில் சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலைமாட சாமி, சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மறச்சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்களான மாலை செய்ய வேண்டி கீழவண்ணான் விளை என்ற கிராமத்தைச் சேர்ந்த குலசாமிக்கு படைப்பதற்காக சத்தியசீலன், சத்திய ரூபன் ஆகிய 2 பக்தர்கள் ஆர்டர் கொடுத்தார்கள். அதன் பேரில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 20 நாட்களாக 120 பேர்கள் கொண்ட குழு விரதமிருந்து இந்த மாலையை தயார் செய்துள்ளோம். இதுபோன்று பல்வேறு வகையில் சிறப்பாக செய்து தர முன்பதிவு செய்தால் செய்து தருவோம் என தெரிவித்தார். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மாலைகளை பார்த்து விவசாயிகளும் பொது மக்களும் ஆச்சர்யத்தோடு பார்த்து செல்கிறார்கள்.



